இருளில் மூழ்கும் இந்திய இதயம்
இருளில் மூழ்கும் இந்திய இதயம்- தேவ்.பாண்டே 'இந்தியாவின் ஜீவன் அதன் கிராமத்தில் தான் இருக்கிறது' என்று கூறினார் தேசப்பிதா காந்தியடிகள். சமீபத்தில், மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி ஒரு பேட்டியில், 'இந்தியா பணக்கார நாடா அல்லது ஏழை நாடா என்ற குழப்பமும், ஆச்சரியமும் சில சமயங்களில் எனக்கு ஏற்படுவதுண்டு.ஆடம்பர செலவு முறைகளைப் பார்க்கும் போது, இந்தியா பணக்கார நாடு என்ற எண்ணம் தோன்றும். அதே சமயம், கிராமங்களின் பக்கம் செல்லும் போது, இந்திய பணக்கார நாடாக இருக்க முடியாது என்று தோன்றும்' என கூறியுள்ளார். நம் நாட்டில் மக்களின் உயிர்நாடியான விவசாயம், மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது. நகர்ப்புறத்து மக்களுக்காக, கிராமப்புற விவசாயிகளை அரசாங்கமும், இன்னும் பிற அமைப்புகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன.'இது என் தலைவிதி, இப்படித்தான் நான் இருக்க வேண்டுமென்று இறைவன் படைத்து விட்டான்' என்று, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொள்கிறான் விவசாயி.கிராமத்தானின் உழைப்பில் கிடைக்கும் விவசாய பொருட்கள் காய்கறி, பால், இப்படி எத்தனையோ பொருட்களை, நகரத்து மக...