Saturday, March 6, 2010

கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர்

கல்வி சேவைக்கு காலணி துடைக்கும் சமூக சேவகர்


Human Intrest detail news

பொன்னேரி: ஏழை மாணவர்களின் கல்வி சேவைக்காக காலணி துடைக்கும் சமூக சேவகரை பேரூராட்சி தலைவர், டி.எஸ்.பி., ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். பட்டதாரியான இவர், இதே பகுதியில் அன்னை தெரசா மழலை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். ஏழை மாணவர்களுக்கு சிறந்த கல்வி சேவையை வழங்கவேண்டும் என்ற உயரிய நோக்குடன் இக்கல்வி மையத்தை நடத்தி வருகிறார்.



இச்சேவையை தொடர்ந்து சிறப்பாக வழங்கவும், சிறந்த கல்வி நிலையத்தை உருவாக்குவதற்காகவும் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் அதிகம் கூடுமிடங்களில் பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து வருகிறார். இதன் மூலம் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் நிதியை கொண்டு, இக்கல்வி நிலையத்தை நடத்தி வருகிறார். இவரது சேவையை கண்டு பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவியை அளித்து வருகின்றனர். பொதுமக்களிடமிருந்து இலவசமாக பணம் வாங்குவதை தவிர்க்க தன்னுடைய உடல் உழைப்பால் அவர்களது காலணிகளை சுத்தம் செய்து, அவர்களிடமிருந்து நிதி பெறுகிறார்.



கடந்த 2001ம் ஆண்டு முதன் முதலில் ஆதரவற்றோர்களுக்கும், உடல் இயலாதவர்களுக்கும் தேவையான உதவிகளை செய்வதற்காக பொதுமக்களின் காலணியை சுத்தம் செய்யும் சேவையை துவங்கிய செல்வகுமார், நாளடைவில் சிறந்த கல்வி சேவைக்காக இப்பணியை மேற்கொண்டு வருகிறார். இவரது கல்வி நிலையத்தில் பயிலும் மாணவர்கள் வெறும் கல்வி கற்பதோடு நின்றுவிடாமல், அவர்களை பொது அறிவிலும் சிறந்தவர்களாக ஆக்க நாள்தோறும் அரும்பாடு பட்டு வருகிறார். இக்கல்வி சேவையை இலவசமாக வழங்க தேவையான பண உதவிக்காக இவர் வாரத்தின் ஐந்து நாட்கள் பள்ளியிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலணிகளை சுத்தம் செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். இதுவரை தமிழகத்தில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களிலும், பொது இடங்களிலும் இச்சேவையை செய்து நிதி வசூல் செய்துள்ளார்.



இச்சேவையை கடந்த எட்டு ஆண்டுகளாக சிறப்பாக செய்து, நேற்று ஒன்பதாவது ஆண்டை பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் துவக்கினார். பொன்னேரி பேரூராட்சி தலைவர் பத்மாவதி, குத்துவிளக்கேற்றி இச்சேவையை துவக்கி வைத்தார். பொன்னேரி டி.எஸ்.பி., ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் தயாளன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கி கவுரவித்தனர். நேற்று காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து, 2,700 ரூபாய் நிதி வசூல் செய்தார். இவரது சேவையை பாராட்டி, பொதுமக்கள் தங்களால் இயன்ற பண உதவியை செய்தனர்.

No comments:

Post a Comment

Infolinks

ShareThis